articles

img

மோடி அரசை வீழ்த்த இந்தியா அணியை பலப்படுத்துவோம்

மோடி அரசின் 7.5 லட்சம் கோடி மெகா ஊழல், சிஏஜி அறிக்கையும் - வகுப்புவாத வெறுப்பு அரசியலும்’ எனும் தலைப்பில் வியாழனன்று (அக்.19) சென்னையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் சிறப்பு கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் தலைவர்கள் பேசியதன் சுருக்கம் வருமாறு:

‘பாஜக ஆட்சியில் சிதைக்கப்படும் நாடாளுமன்ற ஜனநாயகமும், அரசியலமைப்புச் சட்டமும் எனும் தலைப்பில் பத்திரிகையாளர் என்.ராம் பேசியதிலிருந்து...

பாசிச பாணியில் ஒன்றிய பாஜக அரசு செயல்படுகிறது. 1992 மார்க்சிஸ்ட் இதழில் எழுதிய கட்டுரையில், நவீன வலதுசாரி கட்சிகள், பாசிச சிந்தனையோடு, மக்களிடம் பொய்யை பரப்பி, அவர்களுக்காக போராடுவது போன்று பாசாங்கு செய்யும் என்று பிரகாஷ்காரத் குறிப்பிட்டிருந்தார். அதேபோன்று, ராமஜென்ம பூமி இயக்கத்தை தொடங்கி பாபர் மசூதியை இடித்தனர். 370ஆவது பிரிவை நீக்க பிரச்சாரம் செய்தனர் (தற்போது செய்துவிட்டனர்). நவீனம் என்ற பெயரில் வலதுசாரி பொருளாதாரக் கொள்கையை செயல்படுத்தினர்.

2014-இல் மோடி அரசு வருவதற்கு முன்பு மார்க்சிஸ்ட் இதழில் மற்றொரு கட்டுரையை எழுதிய பிரகாஷ்காரத், (மோடி அரசை) தற்போதைய  அளவிற்கு முன்பு எப்போதும், எந்த அரசையும் முதலாளிகள் ஆதரித்தது இல்லை. அனைத்து முதலாளிகளும் ஒன்றுதிரண்டு மோடியை ஆதரிக்கின்றனர் என நிர்ணயித்தார். அதுதான் நடக்கிறது. பாசிச பாணி பாஜகவும், பெருமுதலாளிகளும் இணைந்து கூட்டுக் கொள்ளை அடிக்கின்றனர். விஷமத்தனமான இந்துத்துவா மதவாத ஆட்சி நடந்து கொண்டு இருக்கிறது. இந்தியாவை இந்து நாடாக மாற்ற பகிரங்கமாகச் செயல்படுகின்றனர்.

இந்துத்துவா எதேச்சதிகார அல்லது கார்ப்பரேட் இந்துத்துவா எதேச்சதிகாரத்துடன் பாஜக அரசு செயல்படுகிறது. மதவெறி, மத பயங்கர வாதத்தையும் தாண்டி மோசமான முறையில் பாஜக செயல்படுகிறது. குஜராத் இனப்படுகொலை, முசாபர் நகர், மணிப்பூர் அழிப்பு என செய்கிறது. தேவையேற்படும்போது பயங்கரமாக தாக்குவது, அவ்வப்போது அச்சுறுத்த தாக்குவது என்ற முறையில் செயல்படுகின்றனர். இஸ்லாமியர்கள் போராடினால் உடனடியாக புல்டோசர் அரசியலை கையிலெடுக்கின்றனர்.

அவசரநிலை காலத்துக்குப் பிறகு...

அரசியலமைப்பு சட்டம் உருவாக்கிய அமைப்புகளான சிபிஐ, வருமானவரித்துறை, அமலாக்கத்துறை, தில்லி காவல்துறை, தேசிய புலனாய்வு முகமை போன்றவற்றை பயன்படுத்தி எதிர்க்கட்சிகளை பாஜக அரசு பழிவாங்குகிறது. அவசரநிலை காலத்திற்கு பிறகு எந்த அரசும் தற்போதுள்ள பாஜக அரசை போன்று செயல்பட்டதில்லை. நீதிமன்றங்கள் போதுமான அளவிற்கு மக்களின் அடிப்படை உரிமைகளை பாதுகாக்கத் தவறிவிட்டன. அதனால்தான் மனித உரிமை செயற்பாட்டாளர்கள், பிரபீர் புர்காயஸ்தா போன்றவர்கள் சிறையில் உள்ளனர். குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதில்லை அல்லது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தாலும் நீண்டகாலம் சிறையில் வைத்து விடுகின்றனர். குறிப்பாக, மதச்சார்பின்மைக்கு ஆதரவான எழுத்தாளர்களை சிறையில் தள்ளுகின்றனர். உபா (யுஏபிஏ) சட்டத்தை பயன்படுத்தி 16 பேரை சிறையில் வைத்துள்ளனர். ஜாமீன் கிடைத்தாலும், வேறு குற்றச்சாட்டை கூறி தொடர்ந்து சிறையில் வைக்கின்றனர். வெளிப்படையாக எதேச்சதிகாரம் செலுத்துகின்றனர். அரசியலமைப்புச் சட்டத்திற்கு மாறாக, இறையாண்மைமிக்க மாநில அரசுகளுக்கு எதிராக ஆளுநர்கள் செயல்படுகின்றனர். தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி மாநிலத்தின் பெயரையே மாற்ற நினைத்தார். சட்ட மசோதாக்களை கிடப்பில் வைத்துள்ளார். எதிர்க்கட்சிகள் ஆட்சி செய்யும் கேரளா, மேற்குவங்காளம், தெலுங்கானா போன்ற மாநிலங்களில் உள்ள ஆளுநர்களும் வரம்பை மீறி, பச்சையாக குரூரமாகச் செயல்படுகின்றனர். எனவேதான், ஆளுநர் பதவியை ஒழிக்க வேண்டும் என்று இஎம்எஸ் நம்பூதிரிபாட் வலியுறுத்தினார். 

முறியடிக்க முடியும்

விளையாட்டில் கூட ஆதிக்கம் செலுத்துகின்றனர். மாநில உரிமைகள், மாநில சுயாட்சி என்ற கொள்கைக்கு நேர் எதிராக ஒன்றிய ஆட்சியாளர்கள் நடந்து கொள்கின்றனர். அரசியலமைப்புச் சட்டம் சமமான குடியுரிமையை வழங்குகிறது. இதற்கு நேர்மாறாக இஸ்லாமியர்களை தனிமைப்படுத்த சிஏஏ, என்பிஆர், என்ஆர்சி என்கிற பெரிய அபாயம் உள்ளது. ‘நியூஸ்கிளிக்’ இணைய இதழ் மீது எந்த ஆதாரமும் இன்றி, பயங்கரவாத குற்றச்சாட்டு சுமத்தி வழக்குப் போட்டுள்ளார்கள். இதனை பல்வேறு பத்திரிகையாளர் அமைப்புகள் கண்டித்து, நியூஸ் கிளிக்கை ஆதரித்துள்ளனர். எனவே, நம்பிக்கை இழக்க தேவையில்லை. ஒன்றிய அரசை கட்டாயமாக முறியடிக்க முடியும். அதற்கேற்ப தேர்தலை அணுக வேண்டும். மக்கள் இயக்கங்களை உருவாக்க வேண்டும். ‘இந்தியா’ அணிக்குள் சில முரண்பாடுகள் இருக்கும். தமிழகத்தை முன்னோடியாக கொண்டு, தேசிய அளவில் சிறந்த அணி உருவாகி உள்ளது. கட்சிகளுக்குள் முரண்பாடுகள், வேறுபாடுகளை ஒத்திவைத்து, அணியை விரிவாக்கி இந்துத்துவா எதேச்சதிகார ஆட்சியை வீழ்த்தி வரலாறு படைக்க முடியும்.